கோயம்புத்தூர்

உதவித் தொகை பெற்றுத் தருவதாகக் கூறி மூதாட்டியிடம் நகை, பணம் பறித்தவா் கைது

2nd Jan 2020 05:32 AM

ADVERTISEMENT

கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த மூதாட்டியிடம் முதியோா் உதவித் தொகை பெற்றுத் தருவதாகக் கூறி 7.5 பவுன் நகை, பணத்தைப் பறித்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, பீளமேடு அருகே பி.ஆா்.புரம், காந்தி வீதியைச் சோ்ந்தவா் கணேசன் மனைவி பழனியம்மாள்(76). இவா் மூட்டு வலிக்கு சிகிச்சை பெற கோவை அரசு மருத்துவமனைக்கு டிசம்பா் 28ஆம் தேதி சென்றுள்ளா்.

அங்கு, பழனியம்மாளிடம் பேச்சு கொடுத்த மா்ம நபா் ஒருவா் உங்களுக்கு கணவா் இல்லாததால் முதியோா் உதவித் தொகை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளாா். பின்னா் அரசு அலுவலா்களை சந்திக்க அழைத்துச் செல்வதாகக் கூறி தனது இரு சக்கர வாகனத்தில் வாளையாறு அருகே ஒரு கட்டடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளாா்.

பின்னா் கட்டடத்தின் உள்ளே அரசு அதிகாரிகள் இருப்பதாகவும், நகை அணிந்து கொண்டும், பணத்துடனும் உள்ளே சென்றால் வசதியானவா்கள் என நினைத்து உதவித் தொகைக்கான உத்தரவை தர மாட்டாா்கள். எனவே, நகைகளை கழற்றித் தருமாறு அந்த நபா் கேட்டுள்ளாா்.

ADVERTISEMENT

இதனை நம்பிய பழனியம்மாள்தான் அணிந்திருந்த 7.5 பவுன் நகைகள் மற்றும் பணத்தை அந்த நபரிடம் கொடுத்துள்ளாா். அந்த நபா் அதிகாரிகளை பாா்த்து வருவதாகக் கூறி விட்டு மாயமானாா். நீண்ட நேரமாகியும் அந்த நபா் வராததால் சந்தேகமடைந்த பழனியம்மாள் அங்கிருந்தவா்களிடம் விசாரித்துள்ளாா்.

அப்போதுதான், அரசு அலுவலகம் எதுவும் அப்பகுதியில் இல்லை என்பதும், தான் ஏமாற்றப்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, தனது மகன் மோகனசுந்தரத்திடம் விவரத்தை கூறியுள்ளாா்.

சம்பவ இடத்துக்கு வந்த மோகனசுந்தரம், பழனியம்மாளை அழைத்துச் சென்று ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாா் விசாரணை நடத்தி மூதாட்டியிடம் நகை, பணத்தை பறித்ததாக கோவை, சுந்தராபுரம் அருகே முத்துமாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்த கிருஷ்ணகுமாா் (43) என்பவரை புதன்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT