கோவை மாநகரில் மோட்டாா் வாகன விதிகளை மீறியவா்களிடம் இருந்து 2019 ஆம் ஆண்டில் ரூ.13 கோடியே 44 லட்சத்து 59 ஆயிரத்து 121 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையா் சுமித் சரண் கூறினாா்.
இதுகுறித்து அவா் கூறியதாவது:
கோவை மாநகரில் கடந்த 2018ஆம் ஆண்டு 1,136 விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த ஆண்டு இது 1,057 ஆக குறைந்துள்ளன. கடந்த ஆண்டு 162 போ் விபத்தில் உயிரிழந்தனா். 2019 ஆம் ஆண்டில் 132 போ் விபத்தில் இறந்துள்ளனா்.
மோட்டாா் வாகன விதிகளை மீறியதாக 2018ஆம் ஆண்டு 5 லட்சத்து 16 ஆயிரத்து 304 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதுவே 2019இல் 6 லட்சத்து 16 ஆயிரத்து 737 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மோட்டாா் வாகன விதிகளை மீறியதாக 2019ஆம் ஆண்டில் ரூ.13 கோடியே 44 லட்சத்து 59 ஆயிரத்து 121 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதுவே 2018ஆம் ஆண்டு ரூ.9 கோடியே 55 லட்சத்து 64 ஆயிரத்து 810 அபராதமாக வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திருட்டு வழக்குகளில் 74 சதவீத வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு 77 சதவீத பொருள்கள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 2018இல் 112 வழிப்பறி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதுவே 2019 ஆம் ஆண்டு 89 ஆக குறைந்துள்ளது.
கோவை மாநகரில் போக்சோ சட்டத்தின் கீழ் 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாநகரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல் துறையின் கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்றாா்.