கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் 25 ஆவது பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.
எஸ்.என்.ஆர். அறக்கட்டளையின் இணை அறங்காவலர் டி.லட்சுமிநாராயணசாமி தலைமை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வைதேகி விஜயகுமார் கலந்துகொண்டு பேசியதாவது:
தற்போதுள்ள மாணவர்கள் பல்வேறு புதுமையான சவால்களையும், வாய்ப்புகளையும் சந்தித்து வருகின்றனர். அவை உலக அளவில் பரந்து விரிந்துள்ளன. ஒவ்வொரு சூழ்நிலையையும் வெற்றிக்கான வாய்ப்புகளாக மாற்ற வேண்டும் என்ற நம்பிக்கை மாணவர்களுக்கு இருக்க வேண்டும். சவால்களை கவனியுங்கள், அவற்றுக்கான தீர்வுகளை உருவாக்குங்கள், அதனை பரிசீலனை செய்யுங்கள், அதில் சிறந்த முடிவை தேர்ந்தெடுங்கள். வெற்றிப்பாதையில் தோல்வி ஏற்படலாம். ஆனால் மனம் தளராமல் அதை ஏற்றுக்கொண்டு முன்னேற வேண்டும் என்றார். விழாவில் இளநிலை, முதுநிலை மாணவிகள், பல்கலைக்கழக அளவில் தேர்ச்சிப் பெற்ற 15 மாணவிகள் உள்பட அனைத்து மாணவிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன.