கோவையில் காசோலையைத் திருடி வங்கியில் மாற்ற முயன்றவரை வங்கி ஊழியர்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
கோவை, நஞ்சப்பா சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒருவர் 2 காசோலைகளை மாற்றிப் பணம் பெறுவதற்காக வந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு, வங்கி ஊழியர்கள் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர், சிவகங்கையைச் சேர்ந்த இருதயராஜ் என்பவரது காசோலைகளைத் திருடி வந்து, வங்கியில் மாற்ற முயன்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, வங்கி மேலாளர் சீனிவாசன் அளித்த புகாரின்பேரில், அங்கு வந்த காட்டூர் போலீஸார் அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர், கர்நாடக மாநிலம் பெங்களூரு ஜெயா நகரைச் சேர்ந்த நவீன்(47) என்பதும், காசோலைகளைத் திருடியதும் உறுதியானது. இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்தனர்.