கோவை: விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களை எதிர்த்து திமுக குரல் கொடுக்கும் என அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டம், குண்டடத்தில் விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைப்பதற்காக நில அளவீட்டுப் பணிக்கு வந்த அதிகாரிகளைக் கண்டித்து விவசாயிகள் அண்மையில் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் ஈசன், சண்முகம், முத்துவிஸ்வநாதன், பார்த்தசாரதி, தங்கமுத்து ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை திமுக துணை பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், கோவை மாநகர் மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் ஆகியோர் சிறையில் வியாழக்கிழமை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் சுப்புலட்சுமி ஜெகதீசன் கூறியதாவது:
விளைநிலங்களில் உயர் மின் அழுத்த கோபுரங்களை விவசாயிகளின் அனுமதி இல்லாமல் மத்திய அரசு அமைக்கக் கூடாது. ஏற்கெனவே அமைக்கப்பட்ட உயர் மின் வழித்தடங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படாத நிலையில், புதிதாக அமைக்கப்பட இருக்கும் உயர்மின் கோபுரங்களுக்கு இழப்பீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்லை. மின்சாரத்தை புதைவழித்தடமாக கொண்டு செல்ல வேண்டும். உயர் மின் அழுத்த கோபுரம், கெயில் போன்று விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்தத் திட்டமாக இருந்தாலும் அதை எதிர்த்து திமுக குரல் கொடுக்கும் என்றார்.
பேட்டியின்போது, மாநகர் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் நாச்சிமுத்து, மெட்டல் மணி, நந்தகுமார், புறநகர் வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் வடவள்ளி துரை உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.