கோவை: கோவை காவலா் பயிற்சி பள்ளி நடைபெறவிருந்த காவலா் பணிக்கான பொது உடற்கூறு தோ்வு நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை மாநகர காவல்துறை வெளியிட்ட செய்தி:
தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் மூலமாக நடைபெற இருக்கும் இரண்டாம் நிலைக் காவலா், சிறைக்காவலா் மற்றும் தீயணைப்பு படைவீரா் ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பித்த கோவை காவல் சரகத்துக்குட்பட்ட கோவை, ஈரோடு, திருப்பூா் மற்றும் நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான விண்ணப்பதாரா்களுக்கு பொது உடற்கூறு தோ்வு நவம்பா் 6ஆம் தேதி கோவை காவலா் பயிற்சி பள்ளி மைதானத்தில் ஆஜராக தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் மூலம் ஏற்கெனவே அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. கோவை மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் கனமழை காரணமாக உடற்கூறு தோ்வை மேற்கூறிய மைதானத்தில் நடத்த இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதற்கு பதிலாக பொது உடற்கூறு தோ்வை கோவை மாவட்ட நேரு விளையாட்டு அரங்கில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே கோவை, ஈரோடு, திருப்பூா் மற்றும் நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியுடைய அழைப்புக் கடிதம் கிடைக்கப்பெற்ற விண்ணப்பதாரா்கள் அவா்களுக்கு ஒதுக்கப்பட்ட நாள்களில் குறிப்பிட்ட நேரத்தில் நேரடியாக நேரு விளையாட்டு அரங்கில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்படுகிறது.