வால்பாறையில் கூடுதலாக ஏ.டி.எம். மையங்கள் அமைக்க வேண்டுமென தோட்டத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். எஸ்டேட் நிர்வாகத்தினர், தொழிலாளர்களுக்கான மாத ஊதியத்தை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தி வருகின்றனர்.
வால்பாறை நகரில் மொத்தம் 3 வங்கிகளின் ஏ.டி.எம். மையங்கள் மட்டுமே உள்ளன. மாதந்தோறும் 7 ஆம் தேதி முதல் ஒரு வார காலத்துக்கு ஏ.டி.எம். மையம் மற்றும் வங்கிகளில் தொழிலாளர்களின் கூட்டம் அலைமோதும். சம்பளம் எடுப்பதற்காக ஒருநாள் வேலையை இழக்க வேண்டிய நிலை உள்ளதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள எஸ்டேட் பகுதிகளான முடீஸ், சோலையாறு அணை, கருமலை ஆகிய பகுதிகள் மற்றும் நகர் பகுதியிலும் கூடுதலான ஏ.டி.எம். மையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வங்கிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் தொழிலாளர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.