அன்னூர் அருகே உள்ள எல்லப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை குறித்து துண்டுப் பிரசுரங்கள் வியாழக்கிழமை விநியோகம் செய்யப்பட்டன.
இதற்கு, பள்ளி தலைமை ஆசிரியர் பவளக்கொடி தலைமை வகித்தார். இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு எல்லப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் உள்ள வசதிகள் மற்றும் மாணவர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வழங்கினர். பிரசாரம் துவங்கியதில் இருந்து இதுவரை 11 மாணவர்கள் பள்ளியில் புதிதாக சேர்ந்துள்ளனர். இந்தப் பள்ளியில் ஏற்கெனவே 200 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு, கிராம கல்விக் குழு உறுப்பினர்கள், பெற்றோர் -ஆசிரியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.