கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் பகடிவதை (ராகிங்) தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், இளஞ் செஞ்சிலுவைச் சங்கம், செஞ்சுருள் சங்கம் ஆகியன இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் கி.சித்ரா தலைமை வகித்தார். மாநகர காவல் உதவி ஆணையர் வி.எழிலரசு, காட்டூர் காவல் ஆய்வாளர் டி.சிவகுமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று பேசுகையில், மாணவிகள் சமூக ஊடகங்களை கவனமுடன் கையாள வேண்டும். இணையதளம் மூலம் நல்லவற்றை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். பொதுமக்கள், பெண்களின் பாதுகாப்புக்காக கோவை மாநகர காவல் துறை அறிமுகப்படுத்தியுள்ள செயலிகளைப் பயன்படுத்த வேண்டும் என்றனர்.
நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ப.செல்வி வரவேற்றார். செஞ்சுருள் சங்க திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெனிபர் வெனிசிலா, இளஞ் செஞ்சிலுவைச் சங்கத்தின் திட்ட அலுவலர் டி.அம்சவேணி, பேராசிரியர்கள், மாணவிகள் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.