மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி சாலையில் காட்டுயானை விரட்டியதில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி கெண்டேபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி மகன் நந்தகுமார் (36). இவர், வன பத்திரகாளியம்மன் கோயில் அருகில் தேக்கம்பட்டி சாலையில் இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை இரவு சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் நடமாடிக்கொண்டிருந்த காட்டு யானை திடீரென இவரைத் துரத்தியது. இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவ்வழியாக வந்தவர்கள் யானையை வனப் பகுதிக்குள் விரட்டிவிட்டு மேட்டுப்பாளையம் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வனக் காவலர் நாகராஜ் தலைமையிலான வனக் குழுவினர் தொடர்ந்து அப்பகுதியில் காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.