சென்னையில் செயல்படும் மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரிய அலுவலகத்தை பொள்ளாச்சிக்கு மாற்ற வேண்டும் என பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபையினர் வலியுறுத்தினர்.
இச்சபை ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு தொழில் வர்த்தக சபை தலைவர் ஜி.டி.கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் கு.சண்முகசுந்தரம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இதில், பொள்ளாச்சி தென்னை விவசாயம் நிறைந்த பகுதியாக இருப்பதால், சென்னையில் செயல்பட்டுவரும் மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரிய அலுவலகத்தை பொள்ளாச்சிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நியாய விலைக் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் விநியோகிக்க வேண்டும்.
ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும், பொள்ளாச்சியில் குளிர்சாதன வசதியுடன் கூடிய காய்கறி பதப்படுத்தும் கிடங்கு அமைக்கவேண்டும், பொள்ளாச்சி ரயில்வே வழித்தடத்தை மின்மயமாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இக்கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மக்களவை உறுப்பினர் கு.சண்முகசுந்தரம் தெரிவித்தார்.