கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் மகளிர் சுய உதவி குழுக்கள், தனி நபர்களுக்கு ரூ.56 லட்சத்து 50 ஆயிரம் கடன் வழங்கும் நிகழ்ச்சி பொள்ளாச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பொள்ளாச்சி மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு வங்கியின் தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்து பயனாளிகளுக்கு கடன் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.
வங்கியின் மேலாண்மை இயக்குநர் வெங்கடேசன், துணைத் தலைவர் வேலுச்சாமி, பொள்ளாச்சி கிளை உதவி பொது மேலாளர் முருகன், அதிமுக நிர்வாகிகள் ஜேம்ஸ்ராஜா, அருணாசலம், கனகராஜ், சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேட்டைக்காரன்புதூரைச்சேர்ந்த கணபதி சுய உதவிக்குழுவுக்கு ரூ.10 லட்சம், தாத்தூர் குங்குமசிமிழ் குழுவுக்கு ரூ.5 லட்சம், ரவி என்ற தனி நபருக்கு வீட்டுக்கடனாக ரூ.10 லட்சம், மாற்றுத்திறனாளி தனிநபர் கடன் ரூ.50 ஆயிரம், பொள்ளாச்சி ஆறுமுகம் லே-அவுட்டைச் சேர்ந்த இன்சா அல்லா குழுவுக்கு ரூ.9 லட்சம், ஊஞ்சவேலாம்பட்டி செல்வகணபதி குழுவுக்கு ரூ.10 லட்சம், ஆர்.பொன்னாபுரம் புதுயுகம் குழுவுக்கு ரூ.5 லட்சம், பத்ரகாளியம்மன் கோயில் வீதி மதி மலர் குழுவுக்கு ரூ. 7 லட்சமும் கடன் உதவி வழங்கப்பட்டது.