கோவை, ஒண்டிப்புதூரில் மாடியில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்தார்.
ஒண்டிப்புதூர், ஆஞ்சநேயர் காலனியைச் சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மனைவி மாராத்தாள் (60). இவர் திங்கள்கிழமை தனது வீட்டின் மாடியில் வளர்த்து வரும் செடிகளில் இருந்துப் பூக்களைப் பறித்து வரச் சென்றார். அப்போது, படிக்கட்டில் கால் இடறி மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த மாராத்தாள் சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவலறிந்து அங்கு சென்ற சிங்காநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் அர்ஜூன் குமார் தலைமையிலான போலீஸார், மாராத்தாளின் சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.