கிருஷ்ண ஜயந்தியையொட்டி அன்னூர் கரிவரதராஜப் பெருமாள் கோயிலில் வழுக்கு மரம் ஏறும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
அன்னூர் கரிவரதராஜப் பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜயந்தி விழா கடந்த 24-ஆம் தேதி கிருஷ்ணர் ஊஞ்சல் உற்சவத்துடன் நடைபெற்றது. தொடர்ந்து 25-ஆம் தேதி காலை, ஸ்ரீதேவி- பூதேவி சமேத கரிவரதராஜப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
மாலையில் உறியடி நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பால், தயிர், வெண்ணெய் உறிகள் அடிக்கப்பட்டன. தொடர்ந்து அச்சம்பாளையம் சண்முகம் குழுவினரின் பிருந்தாவன பஜனை நடைபெற்றது.
நிறைவாக வழுக்கு மரம் ஏறும் நிகழ்வு துவங்கியது. இதில் 40 அடி உயரமுள்ள வழுக்கு மரத்தில் வெந்தயம், உயவு எண்ணெய் தடவிய நிலையில் பக்தர்கள் இரவு 10 மணி முதல் போட்டிபோட்டு ஏற முயற்சி செய்தனர். வழுக்கு மரத்தின் உச்சியில் தேங்காய், பழம், காணிக்கைப் பணம் இருந்தது. 2 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு நள்ளிரவு 12 மணியளவில் போட்டியாளர்கள் மரத்தின் உச்சிக்குச் சென்று பண முடிப்பை எடுத்தனர். இவ்விழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.