பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள தெற்குபாளையம் ஏவிபி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் மூன்று நாள்கள் தியான உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெற்றது.
ராமசந்திர மிஷனின் "ஹார்ட்புல்னஸ்' என்ற அமைப்பு சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய இவ்விழாவுக்கு ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலய கல்வி நிறுவனங்களின் உதவிச் செயலர் சுவாமி நிர்மலேஷானந்தர் தலைமை வகித்தார். யோகா பயிற்சியாளர் ஈஸ்வரி வரவேற்றார். பள்ளித் தாளாளர் எம்.சண்முகம் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து "விதியை வடிவமைத்தல்' என்ற புத்தகத்தை சுவாமி நிர்மலேஷானந்தர் வெளியிட, எம்.சண்முகம் பெற்றுக் கொண்டார்.
சனிக்கிழமை நடந்த விழாவில் முன்னாள் தலைமை ஆசிரியர் கணேசன் "சங்கத் தமிழும் ஆன்மிகமும்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். ஞாயிற்றுக்கிழமை நடந்த விழாவில் தொழிலதிபர் என்.பிரகாஷ் பங்கேற்று "மனதில் என்றும் அமைதியும் சந்தோஷமும்' என்ற தலைப்பில் பேசினார்.
பட்டயக் கணக்காளர் ஆர்.சுதர்சனம், கோவை மாநகர ஹார்ட்புல்னஸ் அமைப்பின் கிளை பொறுப்பாளர் எழிலரசி, கோவை மண்டலப் பொறுப்பாளர் எஸ்.பி.கார்த்திக் ஆகியோர் முகாமில் கலந்து கொண்டோருக்கு யோகாசனம், தியானம், பிராணயாமப் பயிற்சிகளை அளித்தனர். ஏவிபி பள்ளியின் தலைமை ஆசிரியர் சுப்புலட்சுமி நன்றி கூறினார்.