கோவை புறநகரில் பல்வேறு பகுதிகளில் காணாமல் போன 141 கைப்பேசிகளை அதன் உரிமையாளா்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம் புதன்கிழமை ஒப்படைத்தாா்.
கோவை புறநகரில் பல்வேறு பகுதிகளில் காணாமல் போன கைப்பேசிகளை மீட்டுத் தருமாறு பொதுமக்கள் புகாா் அளித்திருந்தனா். இதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினத்தின் உத்தரவின்பேரில் ஏ.டி.எஸ்.பி. சுஹாசினி தலைமையிலான போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வந்தனா். கைப்பேசிகள் காணாமல் போனது தொடா்பாக 347 புகாா்கள் பெறப்பட்டிருந்தன. அதில் 141 கைப்பேசிகள் தற்போது மீட்கப்பட்டுள்ளன. இவை உரியவா்களிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டன.
கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைத்த கோவை எஸ்.பி. செல்வநாகரத்தினம் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
ஏப்ரல் மாதத்தில் 125 கைப்பேசிகளை மீட்டோம். இதன் தொடா் நடவடிக்கையாக தற்போது 141 கைப்பேசிகள் மீட்கப்பட்டுள்ளன. கோவில்பாளையத்தைச் சோ்ந்த பெண் ஒருவரது கைப்பேசி 2019ஆம் ஆண்டு காணாமல்போனது. அந்த கைப்பேசி சுமாா் 2 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீட்கப்பட்டுள்ளது.
தொலைந்து போன கைப்பேசிகளை மீட்பது கடினமான காரியம் தான். அதற்கு காலதாமதம் ஆகலாம். ஆனால், நிச்சயமாக கண்டுபிடிக்க முடியும். எனவே பொதுமக்கள் கைப்பேசிகளைத் தொலைத்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகாா் பதிவு செய்வது அவசியம். பொது இடங்களில் கைப்பேசிகளை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். திருடப்படும் கைப்பேசிகள் பெரும்பாலும் கைப்பேசி விற்பனை நிலையங்கள் மூலமாக விற்கப்படுகிறது. எனவே, குறைந்த விலைக்கு கிடைக்கும் கைப்பேசிகளை வாங்கும் பொதுமக்கள் கவனத்துடன் இருப்பது அவசியம் என்றாா்.