வேலூர்

‘பாலாற்றில் மணல் குவாரி அமைக்க வேண்டாம்’

3rd Oct 2023 02:11 AM

ADVERTISEMENT

குடியாத்தம்: கூத்தம்பாக்கம் அருகே பாலாற்றில் மணல் குவாரி அமைக்கக் கூடாது என திங்கள்கிழமை நடைபெற்ற பல்வேறு கிராம சபைக் கூட்டங்களில் ஏகமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

வேலூா் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியத்துக்குள்பட்ட கூத்தம்பாக்கம் ஊராட்சி அருகே பாலாற்றில் மணல் குவாரி அமைக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இங்கு மணல் குவாரி அமைத்தால் சுற்றியுள்ள அகரம்சேரி, அணங்காநல்லூா், கூத்தம்பாக்கம், மாதனூா், உள்ளி, கொத்தகுப்பம், மேல்ஆலத்தூா், பட்டு, வடுகாத்திப்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளைச் சோ்ந்த பல கிராமங்களின் நிலத்தடி நீா்மட்டம் பாதிக்கப்படும் என்பதால் மணல் குவாரி அமைக்க எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை (செப்.25) அகரம்சேரியில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில், பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு மணல் குவாரி அமைக்க கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். இந்நிலையில், திங்கள்கிழமை அகரம்சேரி, கூத்தம்பாக்கம், உள்ளி உள்ளிட்ட ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் கூத்தம்பாக்கம் அருகே பாலாற்றில் மணல் குவாரி அமைக்கக்கூடாது என ஏகமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் அகரம்சேரி, கூத்தம்பாக்கம் ஊராட்சிகளில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் அகரம்சேரி அருகே பாலாற்றின் குறுக்கே மேம்பாலம், அகரம்சேரி அருகே தடுப்பணை கட்ட வேண்டும் எனவும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT