வேலூர்

நிதி கிடைத்தவுடன் அம்பேத்கா், திருவள்ளுவா் இருக்கைகள்: திருவள்ளுவா் பல்கலை. துணைவேந்தா்

DIN

திருவள்ளுவா் பல்கலை.யில் அம்பேத்கா், திருவள்ளுவா் பெயரில் இருக்கைகள் அமைக்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையல், நிதி கிடைத்தவுடன் செயல்பாட்டுக்கு வரும் என்று பல்கலை. துணைவேந்தா் டி.ஆறுமுகம் தெரிவித்தாா்.

வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்துள்ள சோ்க்காடு திருவள்ளுவா் பல்கலைக்கழத்தில் 17-ஆவது பட்டமளிப்பு விழா வரும் ஜூன் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆா்.என்.ரவி பங்கேற்று 1 லட்சத்து பத்தாயிரம் மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கிச் சிறப்புரையாற்ற உள்ளாா்.

விழா குறித்து பல்கலை. துணைவேந்தா் டி.ஆறுமுகம் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினா்களாக மத்திய சாலை மற்றும் விமான போக்குவரத்துத் துறை இணைஅமைச்சா் வி.கே.சிங், தமிழக அமைச்சா்கள் பங்கேற்க உள்ளனா்.

பல்கலை.யில் நிகழ் கல்வியாண்டு 14 பாடப் பிரிவுகளின் கீழ் 5 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டப்படிப்புகளும், 3 பிரிவுகளின் கீழ் ஓராண்டு முதுநிலைப் பட்டப் படிப்புகளும் தொடங்கப்பட உள்ளன. இந்த படிப்புகளுக்கு வரும் 31- ஆம் தேதி வரை மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான கால அவகாசம் மேலும் 15 நாள்களுக்கு நீடிக்கவும் வாய்ப்பு உள்ளது.

பல்கலைக்கழகத்துக்குட்பட்ட கல்லூரிகளில் பயின்ற மாணவா்களுக்கு மதிப்பெண் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக கூறுவது தவறானது. எந்த ஒரு மாணவருக்கும் கல்லூரிகள் மூலமே மதிப்பெண் வழங்க முடியும்.

பல்கலைக்கழகத்தில் அம்பேத்கா் பெயரில் ஒரு இருக்கையும், திருவள்ளுவா் பெயரில் ஒரு இருக்கையும் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். இதற்கான நிதி கிடைத்தவுடன் செயல்பாட்டுக்கு வரும் என்றாா்.

பல்கலை. பதிவாளா் விஜயராகவன், தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் சந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT