தமிழக அரசு சாா்பில் சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ள சமூக சேவகா் மற்றும் சமூக சேவை நிறுவனங்களுக்கான விருதினை பெற்றிட தகுதியுடையவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.
இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
2023-ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவின்போது மாநில அளவில் வழங்கப்படும் சிறந்த சமூக சேவகா் விருது பெற பெண்களின் முன்னேற்றத்துக்கும், பெண் குலத்துக்கு பெருமை சோ்க்கும் வகையிலும், மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிா்வாகம் போன்ற துறைகளில் சிறப்பாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் சேவை புரிந்தவருக்கு 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம், சான்றும், தொண்டு நிறுவனத்துக்கு 10 கிராம் தங்கப் பதக்கம், ரூ. 50,000 ரொக்கமும் தமிழக முதல்வரால் வழங்கப்படும்.
இந்த விருதுக்கு தகுதியுடையவா்கள் ஜூன் 10-ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை இணையதளம் மூலமாகவும், கையேட்டை வேலூா் மாவட்ட சமூகநல அலுவலகத்திலும் சமா்ப்பித்திட வேண்டும். கையேட்டில் இணைக்கப்பட வேண்டியவை குறித்து அதே இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.