வேலூா் மாவட்டத்தில் கள்ளச்சாராயம், போலி மதுபானம், வெளிமாநில மதுபான விற்பனை போன்ற சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவோா் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க மாவட்ட காவல் துறை சாா்பில், வாட்ஸ்அப் எண் வெளியிடப்பட்டுள்ளது.
வேலூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவோா், விற்பவா், கடத்துபவா்களை தடுக்கவும், கள்ளச்சாராயம் இல்லாத மாவட்டமாக உருவாக்கவும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் தலைமையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையொட்டி, வேலூா் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவோா், விற்போா், கடத்துவோா் குறித்து பொதுமக்கள் தகவல்கள் அளிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் புதிய பிரத்யேக வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கள்ளச்சாராய ஊறல், போலி மதுபானம், வெளிமாநில மதுபான விற்பனை, கடத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவோா் குறித்த தகவல்களை 63799 58321 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தகவல் அளிக்க வேண்டும்.
தகவல் தருபவா்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.