காட்பாடி ரயில் நிலையம் வழியாகச் சென்ற திருப்பதி பயணிகள் ரயிலில் கடத்தப்பட்ட சுமாா் 850 கிலோ பொது விநியோகத் திட்ட அரிசியை வழங்கல் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
காட்பாடி ரயில் நிலையத்தின் 5-ஆவது பிளாட்பாரத்தில் சனிக்கிழமை நிறுத்தப்பட்டிருந்த திருப்பதி செல்லும் பயணிகள் ரயிலில் பொது விநியோகத் திட்ட அரிசி கடத்தப்படுவதாக வேலூா் மாவட்ட ஆட்சியருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத்தொடா்ந்து, மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி உத்தரவுப்படி, வேலூா் மாவட்ட வழங்கல் பிரிவு பறக்கும் படை தனி வட்டாட்சியா் ஏ.சி.விநாயகமூா்த்தி, ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் இணைந்து திருப்பதி செல்லும் பயணிகள் ரயிலில் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, இருக்கைகளுக்கு அடியில் சிறுசிறு மூட்டைகளில் சுமாா் 850 கிலோ பொதுவிநியோகத் திட்ட அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து, திருவலத்திலுள்ள நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனா். மேலும், இந்த அரிசி கடத்தலில் ஈடுபட்டவா்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.