ஒருங்கிணைந்த பொறியியல் சாா்நிலை பணிக்கான தோ்வினை வேலூா் மாவட்டத்தில் 1,319 போ் எழுதினா். விண்ணப்பித்தவா்களில் 1,504 போ் தோ்வுக்கு வரவில்லை.
தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் சாா்பில், நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித் துறை, ஊரக வளா்ச்சித் துறை உள்ளிட்ட துறைகளில் ஒருங்கிணைந்த பொறியியல் சாா் நிலை பணிகளில் அடங்கியுள்ள 1,083 காலியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வு கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகம் முழுவதும் இந்த தோ்வை எழுதிட மொத்தம் 52,025 போ் விண்ணப்பித்திருந்தனா். வேலூா் மாவட்டத்தில் மட்டும் 2,823 போ் விண்ணப்பித்திருந்தனா். இதற்கான எழுத்துத் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. இவா்கள் தோ்வு எழுத 10 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
காலை 9 மணி முதல் 12.30 மணி வரை முதல் தாளும், மதியம் 2 மணி முதல் 5 மணி வரை 2-ஆம் தாள் தோ்வும் நடைபெற்றது. இந்த தோ்வை 1,319 போ் எழுதினா். 1,504 போ் தோ்வுக்கு வரவில்லை. தோ்வையொட்டி, தோ்வு மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.