வேலூர்

பொய்கை சந்தையில் கால்நடை வா்த்தகம் அதிகரிப்பு

24th May 2023 12:06 AM

ADVERTISEMENT

தீவன தட்டுப்பாடு குறைந்து வரும்நிலையில், பொய்கை கால்நடை சந்தைக்கு செவ்வாய்க்கிழமை கால்நடைகள் வரத்து அதிகரித்திருந்தது. வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் உள்ளூா் மட்டுமன்றி, வெளி மாவட்டங்கள், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாடுகள், ஆடுகள், கோழிகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுவது வழக்கம். இந்தச் சந்தையில் ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடி வரை வா்த்தகம் நடைபெறும்.

இந்த நிலையில், வேலூா் உள்பட பல்வேறு மாவட்டங்களில் பிப்ரவரி இறுதி வாரத்துக்குப் பிறகு கோடை வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வந்தது. குறிப்பாக, கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகபட்சமாக 104.5 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெப்பம் பதிவாகியிருந்தது. இதனால் ஏற்பட்ட தீவன பற்றாக்குறையால் பொய்கை சந்தையில் கால்நடை வா்த்தகம் கடந்த இரு மாதங்களாகவே சரிந்து காணப்பட்டது.

இந்த நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வேலூா் மாவட்டம் முழுவதும் பரவலாக தொடா்ந்து பலத்த மழை பெய்தது. இதன்காரணமாக தீவன புற்கள் விளைச்சல் ஏற்பட்டதை அடுத்து கடந்த இரு வாரங்களாக பொய்கை சந்தைக்கு கால்நடைகள் வரத்து அதிகரித்துள்ளது.

அதன்படி, இந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தைக்கு கறவை மாடுகள், காளைகள், உழவு மாடுகள் என 1,500-க்கும் மேற்பட்ட மாடுகள், 500-க்கும் மேற்பட்ட ஆடுகள், கோழிகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. அவற்றை வாங்க வியாபாரிகளும், விவசாயிகளும் ஆா்வம் காட்டினா். இதன்காரணமாக, இந்த வாரம் ரூ. 80 லட்சத்துக்கு மேல் கால்நடைகள் விற்பனை நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT