வேலூா் மாவட்டம் முழுவதும் நெடுஞ்சாலையோரங்களில் 12,000 மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தாா்.
முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, மாநில நெடுஞ்சாலைத் துறை சாா்பில் வேலூா் காகிதப்பட்டறையில் மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தேசிய நெடுஞ்சாலைத் துறைக் கோட்ட பொறியாளா் தனசேகா் தலைமை வகித்தாா். உதவி கோட்டை பொறியாளா் பிரகாஷ் முன்னிலை வகித்தாா். இளநிலைப் பொறியாளா் விஜயா வரவேற்றாா்.
மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நெடுஞ்சாலையோரங்களில் மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியைத் தொடங்கி வைத்தாா்.
அதன்படி, வேலூா் மாவட்டம் முழுவதும் நெடுஞ்சாலையோரங்களில் 12,000 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
நிகழ்ச்சியில் வேலூா் வட்டாட்சியா் செந்தில், மாநகராட்சி மாமன்ற உறுப்பினா் மம்தா குமாா், 2-ஆவது மண்டல சுகாதார அலுவலா் லூா்துசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.