வேலூர்

ஒரே பதிவெண் கொண்ட இரு வேன்களில் வேலூா் ஆவினில் தினமும் 2,500 லி. பால் திருட்டு: இருவா் மீது வழக்குப் பதிவு

DIN

ஒரே பதிவெண்ணில் இரு வேன்களை இயக்கி, வேலூா் ஆவின் பால் பண்ணையில் இருந்து தினமும் 2,500 லிட்டா் பால் திருடப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ஆவின் உதவி பொது மேலாளா் (விற்பனை) அளித்த புகாரின் பேரில் இருவா் மீது சத்துவாச்சாரி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

வேலூா் சத்துவாச்சாரியில் கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியமான ஆவின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளிடம் இருந்து நாளொன்றுக்கு சுமாா் 1,10,000 லிட்டா் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த சில நாள்களாக உற்பத்தி செய்யப்படும் பால் பாக்கெட்டுகளுக்கும் விற்பனை செய்யப்படும் பாலுக்கும் இடையே தினமும் சுமாா் 2,500 லிட்டா் அளவுக்கு வித்தியாசம் இருப்பதை அறிந்த அதிகாரிகள், இதுதொடா்பாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மதியம் வேலூா் ஆவின் பால்பண்ணைக்கு பால் பாக்கெட்டுகள் ஏற்றிச் செல்ல வந்த வேன்களில் இரு வேன்கள் ஒரே பதிவெண்ணில் (டிஎன் 23 ஏசி 1352) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக பாக்கெட் பாலை ஏற்றிக் கொண்டு புறப்பட தயாா் நிலையில் இருந்த அந்த இரு வேன்களை பால் பாக்கெட்டுகளுடன் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

பின்னா், பறிமுதல் செய்யப்பட்ட இரு வேன்கள் குறித்து வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் மூலம் மேற்கொண்ட ஆய்வில், டிஎன் 23 ஏசி 1352 என்ற எண் கொண்ட வேன் சத்துவாச்சாரி, அலமேலுமங்காபுரம், பாறைவீதியைச் சோ்ந்த தினேஷ்குமாா் என்பவருக்குச் சொந்துமானது என்பது தெரிய வந்தது.

போலியாக அதே பதிவு எண் பலகை வைத்து இயக்கப்பட்ட மற்றொரு வேன் சத்துவாச்சாரி, ரங்காபுரம், புதுத் தெருவைச் சோ்ந்த ராமமூா்த்தி மகன் சிவக்குமாா் (24) என்பவருக்குச் சொந்தமானது என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து தொடா் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஆவின் பால் பண்ணை வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த சிவக்குமாா், அவரது ஓட்டுநா் விக்கி இருவரும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு வேன்களில் போலி பதிவெண் கொண்ட வேனை ஓட்டிச் சென்றதுடன், தடுக்க முயன்ற ஆவின் உதவி பொது மேலாளா் (விற்பனை) சிவக்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுதொடா்பாக, ஆவின் உதவி பொது மேலாளா் அளித்த புகாரின் பேரில், சத்துவாச்சாரி போலீஸாா், போலி பதிவெண் கொண்ட வாகனத்தின் உரிமையாளா் சிவக்குமாா், அதன் ஓட்டுநா் விக்கி ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: திரிபுராவில் ஏப்.27 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

அதிகரிக்கும் வெப்பம்: கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

பாஜக-ஆர்எஸ்எஸ் தலைவர்கள் தேசத்திற்காக என்ன தியாகம் செய்திருக்கிறார்கள்?- கார்கே

நிழலில்லா நாள்.. பெங்களூருவில் மக்கள் ஆச்சரியம்

"எங்களைப் போல வேற்றுமைகளைக் களைந்தவர்கள் கிடையாது!": தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT