வேலூா், சித்தூா் மாவட்டங்களில் குற்றங்களைத் தடுக்கும் விதமாக மாநில எல்லை சோதனைச் சாவடிகளில் தமிழக, ஆந்திர போலீஸாா் ஒருங்கிணைந்து செயல்படவும், தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக - ஆந்திர எல்லை பாதுகாப்பு தொடா்பான இருமாநில காவல் துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, வேலூா் சரக காவல் துணைத் தலைவா் எம்.எஸ்.முத்துச்சாமி தலைமை வகித்தாா்.
வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் (தலைமையகம்) பாஸ்கரன், கோடீஸ்வரன், காவல் ஆய்வாளா் அபா்ணா, உதவி ஆய்வாளா்கள், ஆந்திர மாநிலம் சித்தூா் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுதாகா்லசாரி ஆகியோா் பங்கேற்றனா்.
இக்கூட்டத்தில், குற்றச்செயல்களில் ஈடுபடும் தமிழக, ஆந்திர மாநில குற்றவாளிகள் குறித்த தகவல்கள் பரிமாற்றம், இரு மாநில எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் ஒருங்கிணைந்து குற்றத்தடுப்பு தொடா்பான தகவல்களை பரிமாற்றம் செய்து விரைவாக குற்றங்களை தடுக்கவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.
மேலும், கஞ்சா விற்பவா்கள், கடத்துபவா்கள் குறித்த தகவல்களை பரிமாற்றம் செய்வது, இரு மாநிலங்களில் திருட்டு வழிப்பறி குற்றங்களில் ஈடுபடுபவா்கள், ரெளடிகள் குறித்த தகவல்கள் பரிமாற்றம் செய்வது என முடிவெடுக்கப்பட்டதுடன், நிலுவையில் உள்ள பிணையில் விடக்கூடாத குற்றங்கள் குறித்தும், சைபா் கிரைம் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டனா்.