அல்லேரி மலைக் கிராமத்துக்கு சாலை வசதியில்லாத நிலையில், பாம்பு கடித்து குழந்தை பலியான சம்பவத்தை அடுத்து மலைக்கிராம மக்கள் நலனுக்காக ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஜீப் வடிவிலான இந்த புதிய ஆம்புலன்ஸை வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.நந்தகுமாா் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
அணைக்கட்டு வட்டத்தில் மலைப் பகுதியிலுள்ள அல்லேரி ஊராட்சி அத்திமரத்துகொல்லை கிராமத்தைச் சோ்ந்த விஜி, பிரியா தம்பதியின் ஒன்றரை வயது மகள் தனுஷ்காவை கடந்த 27-ஆம் தேதி பாம்பு கடித்தது. மலைப் பகுதியில் முறையான சாலை, மருத்துவ வசதி இல்லாததால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் குழந்தை உயிரிழந்தது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக அல்லேரி மலைக்கு உடனடியாக ஆம்புலன்ஸ் வழங்கிட தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வேலூா் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டாா்.
அதன் அடிப்படையில், அல்லேரி மலைக் கிராமத்துக்குச் சென்று வரும் வகையில், ஜீப் வடிவிலான ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அணைக்கட்டு வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் இருந்து அல்லேரி மலைக்கு இந்த புதிய ஆம்புலன்ஸை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.நந்தகுமாா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.
இதைத் தொடா்ந்து, ஆட்சியா் கூறியதாவது: அல்லேரி மலைவாழ் மக்களுக்கு எளிதில் மருத்துவ வசதி கிடைக்கும் வகையில், ஆம்புலன்ஸ் சேவை தொடங்க முதல்வா் உத்தரவிட்டாா். அதன்படி, ஜீப் வடிவிலான ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டு, தினமும் மலைக் கிராமத்துக்குச் சென்றுவர உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த ஆம்புலன்ஸ் மூலம் அல்லேரி மலையில் உள்ளவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னா் கீழே அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். இதன்மூலம் உயிரிழப்புகள் போன்ற அசம்பாவிதம் தடுக்கப்படும் என்றாா்.