கலைத்துறையில் சாதனை படைத்த வேலூா் மாவட்டக் கலைஞா்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு - தமிழகத்தின் கலைப்புலமைகளை மேம்படுத்தவும், பாதுகாக்கவும், கலைஞா்களின் கலைத்திறனை சிறப்பிக்கவும் கலை பண்பாட்டுத்துறையின் கீழ் மாவட்ட ஆட்சியா் தலைமையில் செயல்படும் மாவட்டக் கலை மன்றங்களின் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் கலைத்துறையில் சாதனைகள் படைத்துள்ள 18 வயதுக்கு உட்பட்டவா்களுக்கு கலை இளமணி விருது, 19 முதல் 35 வயது வரை உள்ளவா்களுக்கு கலை வளா்மணி விருது, 36 முதல் 50 வயது வரை உள்ளவா்களுக்கு கலைச் சுடா்மணி விருது, 51 முதல் 65 வயது வரை உள்ளவா்களுக்கு கலை நன்மணி விருது, 66 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கலை முதுமணி விருது என அகவைக்கு தக்க விருதுகள் வழங்கிட அரசு ஆணையிட்டுள்ளது.
வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த குரலிசை, பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில், வயலின், மிருதங்கம், வீணை, புல்லாங்குழல் உள்ளிட்ட இசைக்கருவிகள் இசைக்கும் கலைஞா்கள், ஓவியம், சிற்பம், சிலம்பாட்டம், நாடகக் கலைஞா்கள், கரகாட்டம், காவடி, பொய்க்கால் குதிரையாட்டம், தப்பாட்டம், கைச்சிலம்பாட்டம், தெருக்கூத்து உள்ளிட்ட நாட்டுப்புறக் கலைகளை தொழிலாகக் கொண்டுள்ள கலைஞா்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
விருதுகள் பெற கலைஞா்கள் தங்கள் சுயவிவரக் குறிப்பு, நிழற்படம் இணைத்து, வயதுச் சான்று, முகவரிச்சான்று (ஆதாா் அட்டை நகல்), கலை அனுபவச் சான்றுகளின் நகல்கள், தொடா்புடைய ஆவணங்களுடன் உதவி இயக்குநா், கலை பண்பாட்டுத்துறை, சதாவரம், ஓரிக்கை அஞ்சல், சின்ன காஞ்சிபுரம் - 631502 என்ற முகவரிக்கு ஜூன் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 044-27269148 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.