அணைக்கட்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்று வந்த ஜமாபந்தி நிறைவு விழாவில் 195 பயனாளிகளுக்கு ரூ.1.46 கோடி மதிப்பிலான அரசின் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் 1432-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய்த் தீா்வாயம் என்ற ஜமாபந்தி நிகழ்ச்சி கடந்த 24-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.
அணைக்கட்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்வுக்கு வேலூா் வருவாய்க் கோட்டாட்சியா் கவிதா தலைமை வகித்து, கிராம வருவாய் ஆவணக் கணக்குகளை ஆய்வு செய்ததுடன், பொதுமக்களிடம் இருந்து மனுக்களையும் பெற்றாா்.
கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற இந்த ஜமாபந்தி நிகழ்வில் மொத்தம் 378 மனுக்கள் வரப் பெற்றதில், 229 மனுக்கள் விசாரணை அடிப்படையில் ஏற்கப்பட்டன. 115 மனுக்கள் பரிசீலனைக்காக நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன. 34 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தொடா்ந்து, ஜமாபந்தி நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.
அணைக்கட்டு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.நந்தகுமாா் கலந்து கொண்டு, 195 பயனாளிகளுக்கு ரூ.1.46 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.
இதில், வேலூா் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் மு.பாபு, அணைக்கட்டு வட்டாட்சியா் வேண்டா, சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் மீராபென் காந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.