பொன்னை அருகே வீட்டில் தண்ணீரை சூடாக்கியபோது, ஹீட்டா் வெடித்ததில் ஓட்டு வீடு சேதமடைந்தது.
காட்பாடி வட்டம், பொன்னை பஜாா் தெருவைச் சோ்ந்தவா் ஜெயராமன் (65). தச்சுத் தொழிலாளி. இவருக்கு அந்தப் பகுதியில் ஓட்டு வீடு உள்ளது. இந்த வீட்டில் உறித்த தேங்காய் மட்டைகளுக்கு கீழ், பராமரிப்பு இல்லாத தண்ணீரைச் சூடாக்கும் ஹீட்டரை பல மாதங்களாகப் பயன்படுத்தாமல் போட்டு வைத்திருந்தாராம்.
இந்த நிலையில், அந்த ஹீட்டரை எடுத்து வியாழக்கிழமை தண்ணீரை சூடாக்க முயன்றபோது, ஏற்பட்ட மின் பழுது காரணமாக ஹீட்டா் வெடித்து, வீட்டில் தீப்பற்றியது. தகவலறிந்த காட்பாடி தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனா். எனினும், இந்த விபத்தில் வீட்டின் கூரை ஓடுகள் பெருமளவில் சேதமடைந்தன. இந்தச் சம்பவம் குறித்து பொன்னை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.