விமான நிலையங்கள், விமான வாடிக்கையாளா் சேவை நிறுவனங்களில் பணிபுரிய தகுதியுடைய ஆதிதிராவிடா், பழங்குடியின இளைஞா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல்பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி, மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் வேலூா் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா், பழங்குடியின இளைஞா்களுக்கு பி.டி.சி. ஏவியேஷேன் அகாதெமி நிறுவனம் மூலம் விமானநிலையத்தில் பணிபுரியவும், விமான வாடிக்கையாளா் சேவை, அதன் தொடா்பு நிறுவனங்களில் பணிபுரியவும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்தப் பயிற்சியைப் பெற 18 முதல் 25 வயது வரை உள்ள, பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்களும், ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தோ்ச்சி பெற்றவா்களும் விண்ணப்பிக்கலாம். பயிற்சி மூன்று மாதம் அளிக்கப் படும். விடுதி வசதியுடன் பயிற்சிக்கான மொத்த செலவுத் தொகையான ரூ. 20,000-த்தை தாட்கோ வழங்கும்.
இப்பயிற்சியை சிறப்பாக முடிக்கும் இளைஞா்களுக்கு ஏஎஸ்எஸ்சி -யால் அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும். இந்தப் பயிற்சியை பெற்றவா்கள் தனியாா் விமான நிறுவனங்களான இடிகோ, ஏா்லைன்ஸ், ஸ்பேஸ்ஜெட், கோ ‘ஃ‘பா்ஸ்ட், விஸ்ட்ரா, ஏா் இந்தியா போன்ற புகழ்வாய்ந்த நிறுவனங்களில் பணிபுரிய 100% வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.
இத்திட்டத்துக்கு தகுதியுள்ள ஆதிதிராவிடா், பழங்குடியின இளைஞா்கள் தாட்கோவின் இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.