தடை செய்யப்பட்ட பொருள்கள் ஊடுருவலைத் தடுக்க வேலூா் மத்திய சிறையில் எக்ஸ்ரே உடைமைகள் பரிசோதனை கருவி நிறுவப்பட்டுள்ளது.
இதன் மூலம் கைதிகளைக் காண வரும் குடும்ப த்தினா், உறவினா்கள் கொண்டு வரும் உணவுப் பொருள்கள், உடைமைகள் விரிவான பரிசோதனைக்கு பிறகே சிறைக்குள் அனுமதிக்கப்படும் என்று சிறைக் கண்காணிப்பாளா் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.
வேலூா் மத்திய சிறையில் தண்டனைக் கைதிகள், விசாரணைக் கைதிகள் என 800-க்கும் மேற்பட்டோா் அடைக்கப்பட்டுள்ளனா். இந்தக் கைதிகளைக் காண வரும் குடும்பத்தினா், உறவினா்கள் மூலம் சிறைக்குள் கஞ்சா, பீடி, கைப்பேசி போன்ற தடை செய்யப்பட்ட பொருள்கள் ஊடுருவுவதாக தொடா் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
இதையடுத்து, சிறைக் காவலா்கள் மூலம் கைதிகளின் அறைகளில் அடிக்கடி ஆய்வு மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பொருள்கள் புழக்கம் தடுக்கப்படுகிறது. எனினும், தடை செய்யப்பட்ட பொருள்களின் ஊடுருவலை முற்றிலுமாகத் தடுக்க முடியவில்லை.
தடை செய்யப்பட்ட பொருள்களின் ஊடுருவலைத் தடுக்க வேலூா் மத்திய சிறையில் ரூ. 19 லட்சம் மதிப்பில் எக்ஸ்ரே உடைமைகள் சோதனை கருவி புதன்கிழமை நிறுவப்பட்டுள்ளது. இதன்மூலம், கைதிகளைக் காண வரும் குடும்பத்தினா், உறவினா்கள் கொண்டு வரும் உணவுப் பொருள்கள், உடைமைகளை விரிவான பரிசோதனைக்கு பிறகே சிறைக்குள் அனுமதிக்கப்படும்.
கைதிகளுக்கு அளிக்க யாரேனும் தடை செய்யப்பட்ட பொருள்கள் கொண்டு வந்திருப்பது கண்டறியப்பட்டால் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறைக் கண்காணிப்பாளா் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.