வேலூா் மாநகரில் கோடை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியதால் பகல் நேரத்தில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகக் காணப்பட்டது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் வடகிழக்குப் பருவமழை முடிவுக்கு வந்ததும், பிப்ரவரி மாத இறுதி அல்லது மாா்ச் மாதத் தொடக்கத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கும். அதில், வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அதிகம் வெப்பம் காணப்படும்.
இது, படிப்படியாக அதிகரித்து மே மாதத்தில் 110 டிகிரி ‘ஃபாரன்ஹீட்டைத் தாண்டும்.
ஆனால், நிகழாண்டு பிப்ரவரி மாதம் முதல் வாரத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பனிப்பொழிவு கடுமையாக இருந்து வந்த நிலையில், தற்போது வெயிலின் தாக்கமும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் சாலைகளில் நடமாட தயக்கம் காட்டி, வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சுட்டெரிக்கும் வெயிலால் வேலூா் மாநகரின் பல்வேறு இடங்களில் தா்பூசணி, இளநீா், கூழ், மோா், பழச்சாறு விற்பனை அதிகரித்து வருகிறது.