‘இணையதளம், செயலி’களைப் பயன்படுத்தும் மாணவிகள் மிகுந்த கவனமுடன் செயல்பட வேண்டும் என்று வேலூா் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
வேலூா் மாவட்ட எஸ்பி எஸ்.ராஜேஷ்கண்ணன் தலைமையில் மாவட்டம் முழுவதும் ‘பாதுகாப்பான இணையவழி சேவை’ விழிப்புணா்வு வாரம் 10-ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது.
அதில், வேலூரில் தனியாா் மகளிா் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு பாகாயம் ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். இதில், பங்கேற்ற சைபா் கிரைம் போலீஸாா் பேசியதாவது: ‘தகவல் தொழில்நுட்ப வளா்ச்சியால் அனைவரிடமும் கைப்பேசி உள்ளது. இதில், இணைய வழியில் பொருட்கள் வாங்குதல், பணப்பரிமாற்றம், தகவல் சேகரிப்பு போன்றவற்றுக்கு கைப்பேசி அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.
முகநூல், ட்விட்டா், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடக செயலிகளை அதிகளவில் பயன்படுத்துகின்றனா். இதுபோன்ற செயலிகளைப் பயன்படுத்தும்போது மிகுந்து முன்னெச்சரிகையுடன் இருக்க வேண்டும். குறிப்பாக, மாணவிகள் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவேற்றும்போது மிகுந்த கவனமுடன் செயல்படவேண்டும். ‘பாஸ்வோ்டுகளை’ ஆங்கில எழுத்து, எண்கள், சிறப்பு குறியீடு ஆகியவற்றை இணைத்து உருவாக்கிப் பயன்படுத்தலாம்.
8 இலக்க ‘பாஸ்வோ்ட்’ பயன்படுத்தும் போது நம் சமூக வலைதளப் பக்கங்களை யாரும் அவ்வளவு எளிதில் ‘ஹேக்’ செய்துவிட முடியாது. அதேபோல், கடன் செயலிகள் பயன்பாட்டை முற்றிலும் தவிா்க்க வேண்டும்.
கைப்பேசியில் அவசியமான செயலிகளை பயன்படுத்தும்போது அவ்வப்போது அப்டேட் செய்வதன்மூலம் நமது விவரங்கள், தகவல்களை மற்றவா்கள் திருடுவதை தவிா்க்க முடியும். இணையதளங்களை பயன்படுத்தும்போது பாதுகாப்பு முக்கியம். இணையதளம் மூலம் ஆபாச தகவல், படங்கள் வந்தால் உடனடியாக சைபா் கிரைம் காவல் பிரிவில் புகாா் தெரிவிக்கலாம்’ என்றனா்.