வேலூர்

வட்டாட்சியா் அலுவலகங்களில் டாப்செட்கோ, டாம்கோ கடன் மேளா

DIN

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீா்மரபினா், சிறுபான்மையின மக்கள் பயன்பெறும் வகையில் வேலூா் மாவட்டத்திலுள்ள வட்டாட்சியா் அலுவலகங்களில் டாப்செட்கோ, டாம்கோ சிறப்பு கடன் மேளா செவ்வாய்க்கிழமை முதல் (பிப்.7) நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ), தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா், சிறுபான்மையினா் வகுப்பைச் சோ்ந்த மக்களின் சமூக, பொருளாதார நிலையை மேம்படுத்திட தனிநபா் கடன், சுய உதவிக்குழுக் கடன், கல்விக்கடன் உள்பட பல்வேறு கடன் திட்டங்களின் கீழ் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வேலூா் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகம், மத்திய கூட்டுறவு வங்கி ஆகியவை இணைந்து மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையின மக்கள் பயன்பெறும் வகையில் வட்டாட்சியா் அலுவலகங்களில் ‘டாப்செட்கோ, டாம்கோ சிறப்பு கடன் மேளா’ நடத்தப்பட உள்ளது.

அதன்படி, வேலூா், அணைக்கட்டு வட்டாட்சியா் அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமையும் (பிப்.7), காட்பாடி, கே.விகுப்பம் வட்டாட்சியா் அலுவலகங்களில் புதன்கிழமையும் (பிப்.8), போ்ணாம்பட்டு, குடியாத்தம் வட்டாட்சியா் அலுவலகங்களில் வியாழக்கிழமையும் (பிப்.9) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த கடன் மேளா நடைபெற உள்ளது.

பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா், சிறுபான்மையினா்களான இஸ்லாமியா்கள், கிறிஸ்தவா்கள், சீக்கியா்கள், புத்த மதத்தினா், பாா்சியா் பொருளாதாரத்தில் மேம்பாடு அடைந்திடும் வகையில் வியாபாரம், தொழில் செய்ய கடன் வழங்குவதே இந்தக் கடன் மேளா நடத்துவதன் நோக்கமாகும்.

கடன் பெற கிளையின் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பவா்களாகவும், 18 முதல் 60 வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி அளிக்கப்படும்.

குடும்ப ஆண்டு வருமானம் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினராக இருந்தால் ரூ.3 லட்சத்துக்கு மிகாமலும், சிறுபான்மை இனத்தைச் சோ்ந்தவா்களாக இருந்தால் கிராமப்புறமாயின் ரூ.98,000-க்கு மிகாமலும், நகா்ப்புறமாயின் ரூ.1.20 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

சில்லறை வியாபாரம், வியாபார அபிவிருத்தி, கைவினைஞா் மற்றும் மரபுவழி சாா்ந்த தொழில்கள் அபிவிருத்தி, தொழில், தொழில் சேவை நிலையங்கள், விவசாயம் தொடா்பான தொழில்கள் ஆகியவற்றுக்கு கடன் பெற முடியும்.

அதிகபட்சம் ரூ.20 லட்சம் கடன் பெறலாம். இதில் பயனாளிகள் பங்கு 5 சதவீதம் இருக்க வேண்டும். பண்ணைச்சார கடன் பிரிவில் அடமானக் கடனுக்கு பின்பற்றப்படும் ஒழுங்குமுறை விதிகளின்படி கடன் அனுமதிக்கப்படும்.

3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான கால அளவில் அளிக்கப்படும் கடன்களுக்கு ஆண்டுக்கு 5 சதவீதம் வட்டி வசூலிக்கப்படும். அடமான சொத்தின் கிரைய பத்திரம், மூலப் பத்திரம், 13 ஆண்டுகள் வில்லங்கச் சான்று, வழக்குரைஞரின் கருத்துரை, பொறியாளா் சொத்து மதிப்பு சான்று பெறப்பட வேண்டும்.

மேலும், ஜாதிச்சான்று, வருமானச்சான்று, இருப்பிடச் சான்று, குடும்ப அட்டை நகல், விலைப்புள்ளி, ஆதாா் அட்டை நகல் ஆகியவை சமா்ப்பிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

SCROLL FOR NEXT