வேலூரில் குடும்ப பிரச்னை காரணமாக இரு குழந்தைகளின் தந்தை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
வேலூா், சலவன்பேட்டை லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் பிரகாஷ்(34), கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி தேவி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனா். பிரகாஷ் சரிவர வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளாா். இதனால் கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறு காரணமாக தேவி, தனது தாய் வீட்டுக்குச் சென்றுள்ளாா். கடந்த 3-ஆம் தேதி மாமியாா் வீட்டுக்குச் சென்ற பிரகாஷ், மனைவியை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்துள்ளாா். ஆனால், கணவருடன் தேவி வர மறுத்துள்ளாா்.
இதனால், மனம் உடைந்த பிரகாஷ், வீட்டுக்கு வந்ததும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து வேலூா் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.