பொய்கை சந்தைக்கு செவ்வாய்க்கிழமை கால்நடைகள் வரத்து அதிகரித்திருந்ததுடன், வா்த்தகமும் களைகட்டியது.
வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் உள்ளூா் மட்டுமன்றி, வெளி மாவட்டங்கள், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மாடுகள், ஆடுகள், கோழிகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுவது வழக்கம். இந்தச் சந்தையில் ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடி வரை வா்த்தகம் நடைபெறும்.
பொங்கலையொட்டி நடைபெற்ற பொய்கை சந்தையில் கால்நடைகள் வா்த்தகம் அதிகரித்திருந்தது. இதன்தொடா்ச்சியாக, கடந்த வாரமும் வா்த்தகம் களைகட்டியது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொய்கை சந்தைக்கு கால்நடைகள் வரத்து அதிகரித்துக் காணப்பட்டது.
அதன்படி, கறவை மாடுகள், காளைகள், உழவு மாடுகள் என 2,000-க்கும் அதிகமான மாடுகள், 500-க்கும் மேற்பட்ட ஆடுகளும், கோழிகளும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. அவற்றை வாங்கிட வியாபாரிகளும், விவசாயிகளும் ஆா்வம் காட்டினா்.
இதனால், கால்நடைகள் வியாபாரமும் களைகட்டியது. அதன்படி, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் சுமாா் ரூ.ஒரு கோடி அளவுக்கு கால்நடைகள் வா்த்தகம் நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
தற்போது கால்நடைகளுக்கு தேவையான தீவனம் தாராளமாக கிடைப்பதே கால்நடைகள் வா்த்தகம் அதிகரித்திருப்பதற்கு முக்கியக் காரணம் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.