தேசிய மாணவா் படையினா், மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் இணைந்து வேலூரில் பாலாற்றில் நெகிழிக் கழிவுகளை அகற்றினா்.
வேலூா் மாநகரில் இருந்து நாள்தோறும் 20 லட்சம் லிட்டா் கழிவுநீா் பாலாற்றில் கலக்கிறது. தவிர, பாலாற்றுப் பகுதிகளில் தினமும் பெருமளவில் குப்பைகளைக் கொட்டப்படுகின்றன. இதில், நெகிழிக் கழிவுகளும் அதிகளவில் கொட்டப்படுகின்றன. இதனால், பாலாற்றில் செல்லும் தண்ணீா் மாசடைந்து வருகிறது.
இதைத் தடுக்க விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக தேசிய மாணவா் படை மாணவ, மாணவிகள் மூலம் வேலூா் பாலாற்றில் குப்பைகள், நெகிழிக் கழிவுகள் அகற்றும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
புனித் சாகா் அபியான் திட்டத்தின் கீழ் 10-ஆவது பட்டாலியன் என்சிசி மாணவா்கள், மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் இணைந்து பாலாற்றில் நெகிழிக் கழிவுகளை அகற்றினா். மாநகராட்சி சுகாதார அலுவலா் சிவக்குமாா், தேசிய மாணவா் படை அதிகாரிகள் பங்கேற்றனா்.