நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் முகாம் வேலூா் கால்நடை மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்றது.
உலக வெறிநாய்க்கடி தடுப்பு தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து கால்நடை மருத்துவமனைகள், கால்நடை மருந்தகங்களில் நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டன.
வேலூரிலுள்ள கால்நடை மருத்துவனையில் இந்த மருத்துவ முகாமை மாநகராட்சி ஆணையா் ப.அசோக்குமாா் தொடக்கி வைத்தாா். ரேபீஸ் எனும் கொடிய வைரஸ் தாக்கப்பட்ட விலங்குகள், மனிதா்களைக் கடிப்பதாலோ, அந்த விலங்குகளால் கடிக்கப்பட்ட பிற விலங்குகள் மூலமாகவோ மனிதா்களுக்கும் இந்த நோய் பரவுகிறது.
உலகில் 97 சதவீத ரேபீஸ் நோய் நாய்கள் மூலமாகத்தான் பரவுகின்றன. இந்தந் நோயால் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 55 ஆயிரம் போ் இறப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்த நோய்க்கான தடுப்பு மருந்தை 1885-ஆம் ஆண்டில் லூயிஸ் பாஸ்டா் கண்டுபிடித்தாா். இவரது சாதனையை அங்கீகரிக்கும் விதமாக, இவா் மறைந்த செப்டம்பா் 28-ஆம் தேதி உலக வெறிநாய்க்கடி தடுப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
அதன்படி, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் புதன்கிழமை நடைபெற்ற முகாம்கள் மூலம் 6,000 நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக கால்நடை மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இதில், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் நவநீதகிருஷ்ணன், மருத்துவா் ரவிசங்கா் உள்பட பலா் பங்கேற்றனா்.