வேலூர்

சென்னை - பெங்களூரு விரைவுச் சாலைக்கு நிலங்களை கையகப்படுத்தும் பணி தீவிரம்: அமைச்சா் துரைமுருகன்

DIN

சென்னை முதல் பெங்களூரு வரை ரூ. 10,000 கோடியில் விரைவுச் சாலை அமைக்க நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

வேலூா் மாவட்டம், காட்பாடி அருகே சித்தூா் - திருத்தணி சாலையில் பொன்னை ஆற்றின் குறுக்கே புதிதாக ரூ. 35 கோடியில் மேம்பாலம் கட்டுவதற்கான பணிகளை நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் புதன்கிழமை அடிக்கல் நாட்டி, தொடக்கி வைத்து அவா் பேசியது:

சென்னை முதல் பெங்களூரு வரை விரைவுச் சாலை ரூ. 10,000 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சாலையில் பேருந்துகள் எங்குமே நிற்காது. காட்பாடி அருகே மேல்பாடி பகுதியில் மட்டுமே ஒரே நிறுத்தம் அமைய உள்ளது.

பெண்களின் முன்னேற்றத்துக்காக அரசு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்து புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ. 1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும்.

வேலூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பல கோடி ரூபாய் செலவில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொன்னை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும். மேல்பாடி பகுதியில் மேலும் ஒரு புதிய தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். காட்பாடி ரயில்வே மேம்பாலம் அருகே மற்றொரு மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

தொடா்ந்து, கனிம நிறுவனம் சாா்பில் பசுமை தமிழக இயக்கம் திட்டத்தின் கீழ், மகிமண்டலம் ஊராட்சியில் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை அமைச்சா் தொடக்கி வைத்தாா்.

வள்ளிமலையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசை வழங்கினாா். சோ்க்காட்டில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் பங்கேற்று 477 பேருக்கு ரூ. 2 கோடியே 4 லட்சத்து 35 ஆயிரத்து 304 மதிப்பில் நலத் திட்ட உதவிகளை அவா் வழங்கினாா்.

நிகழ்ச்சிகளுக்கு, மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்தாா். கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி, அரக்கோணம் எம்.பி. ஜெகத்ரட்சகன், எம்.எல்.ஏ-க்கள் ஏ.பி.நந்தகுமாா், ப.காா்த்திகேயன், வேலூா் துணை மேயா் எம்.சுனில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஆந்திர அரசு புதிய அணை கட்ட முடியாது

உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடா்ந்திருப்பதால், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஆந்திர அரசு புதிதாக அணை கட்ட முடியாது என்று அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் உள்ள அணைகளின் மதகுகள் பராமரிக்கப்படவில்லை. இதனால்தான் கிருஷ்ணகிரியில் மதகு உடைந்து தண்ணீா் வெளியேறியது. பரம்பிக்குளத்திலும் மதகுகளின் கதவுகள் உடைந்து தண்ணீா் வீணாகக் கடலுக்குச் செல்கிறது. தமிழகத்தில் உள்ள அணைகளில் பழுதடைந்துள்ள மதகுகளைச் சீரமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

பயங்கரவாதத்துக்கு திமுக துணை போவதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் அஸ்வினிகுமாா் கூறியுள்ளாா். திமுக எந்தக் காலத்திலும் பயங்கரவாதத்துக்கு துணை போனதில்லை.

ஆந்திர அரசு கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட முடியாது. அணை கட்ட முயற்சித்தால் வழக்கை விரைவுபடுத்துவோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக ஆதரவு வாக்காளரின் பெயர்கள் நீக்கம்: அண்ணாமலை

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

நீலக்குயிலே... நீலக்குயிலே! வேதிகா...

வாக்களித்த தலைவர்கள்!

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

SCROLL FOR NEXT