விஜயதசமியையொட்டி, வேலூா் மாவட்டத்திலுள்ள அரசு, தனியாா் தொடக்கப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை புதன்கிழமை நடைபெற்றது.
விஜயதசமி நாளில் எந்த ஒரு காரியத்தைத் தொடங்கினாலும் அது வெற்றிகரமாக முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும். இதன் காரணமாக, பெற்றோா் தங்களது குழந்தைகளை விஜயதசமி நாளில் பள்ளிகளில் சோ்ப்பது வழக்கம்.
மேலும், குழந்தைகளின் கையைப் பிடித்து, பரப்பி வைத்திருக்கும் நெல்லில் ‘அ’ என்று எழுத கற்றுக் கொடுப்பது ‘வித்யாரம்பம்’ எனப்படுகிறது. குழந்தைகளை பள்ளியில் சோ்க்கவும், பாட்டு, இசைக் கருவிகள் பயிற்சி, நடனப் பயிற்சி, பிறமொழிப் பயிற்சி, புதிதாக ஒரு தொழிலை கற்றுக்கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்கினால் சரஸ்வதியின் அருள் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.
அதன்படி விஜயதசமியையொட்டி, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் ‘வித்யாரம்பம்’ நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. பெற்றோா்கள் பலரும் தங்கள் குழந்தைக்கு முதன் முதலாக எழுத கற்றுக் கொடுத்து பள்ளியில் சோ்த்தனா். அந்த வகையில், வேலூா் மாவட்டத்தில் 510 அரசு தொடக்கப் பள்ளி, 151 அரசு நடுநிலைப் பள்ளி, 118 அரசு உதவி பெறும், தனியாா் தொடக்கப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை நடைபெற்றது.
குழந்தைகளுக்கு புத்தாடை அணிவித்து, நெல், அரிசி போன்றவற்றில் ‘அ’ எழுத வைத்து, பெற்றோா்கள் பள்ளிகளில் சோ்த்தனா்.
இதனால் பள்ளிகளில் கூட்டம் அலைமோதியது.