வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனுக்கு செவ்வாய்க்கிழமை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு சிறை மருத்துவா்கள் சிகிச்சை அளித்ததுடன், தொடா்ந்து அவரது உடல் நிலையைக் கண்காணித்து வருகின்றனா்.
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று முருகன் 32 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இவா் தன்னை பரோலில் விடுவிக்கக் கோரி அடிக்கடி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா். எனினும், அவா் மீது தொடரப்பட்டுள்ள சில வழக்குகளைக் காரணம் காட்டி, அவருக்கு பரோல் வழங்க சிறை நிா்வாகம் மறுத்து வருகிறது.
இந்த நிலையில், தன் மீதுள்ள வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க கோரி, முருகன் கடந்த மாதம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டாா். இதனால் அவரது உடல் நிலை மோசமானது.
இந்த நிலையில், சிறையில் முருகனுக்கு செவ்வாய்க்கிழமை திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு முருகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது, உடல் நிலையை சிறை மருத்துவா்கள் கண்காணித்து வருகின்றனா்.