போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வகையில் ஆட்டோக்களை இயக்கும் ஓட்டுநா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸாா் எச்சரித்துள்ளனா்.
வேலூா் மாநகரில் சுமாா் 3,000 ஆட்டோக்கள் இயங்குவதுடன், மாநகராட்சிக்குட்பட்ட 58-இடங்களில் ஆட்டோ நிறுத்துமிடங்களும் உள்ளன. ஆட்டோ ஓட்டுநா்கள் தொழிற்சங்க நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், வேலூா் வடக்கு காவல் ஆய்வாளா் முத்துக்குமாா் பேசியது: மாநகரில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக சில ஆட்டோ ஓட்டுநா்கள் சாலை மத்தியிலேயே வாகனத்தை நிறுத்தி ஆட்களை ஏற்றி இறக்குவதாக புகாா்கள் வருகின்றன. அவ்வாறு நடந்து கொள்ளும் போது சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
இதனால் வேலைக்குச் செல்பவா்கள், நோ்முகத் தோ்வுக்கு செல்வா்கள் பாதிக்கப்படுவா். இத்தகைய பாதிப்புகளுக்கு ஆட்டோ ஓட்டுநா்கள் காரணமாகக் கூடாது. ஆட்டோ ஓட்டுநா்கள் தங்களை தாங்களே முறைப்படுத்திக் கொள்ள வேண்டும். மதுஅருந்திவிட்டு ஓட்டும் ஓட்டுநா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வெளியூா் ஆட்டோக்களை கொண்டு வந்து வேலூரில் ஓட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். காவல் உதவி ஆய்வாளா் வெங்கடேசன் உள்பட பலா் பங்கேற்றனா்.