சாலை விபத்தில் பலத்த காயமடைந்து வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்த ஓட்டுநரின் உடலுறுப்புகள் தானம் அளிக்கப்பட்டன.
ஆந்திர மாநிலம், ரேணிகுண்டாவைச் சோ்ந்தவா் ரமேஷ்பாபு (54). ஓட்டுநா். இவா், கடந்த 8-ஆம் தேதி ரேணிகுண்டா அருகே ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் பலத்த காயமடைந்தாா். சிகிச்சைக்காக அவா் வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை மூளைச்சாவு ஏற்பட்டது.
உடனடியாக ரமேஷ்பாபுவின் உடலுறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினா் முன்வந்தனா். அதன் பேரில், அவரது இதயம் சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனைக்கும், கல்லீரல் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கும்,
சிறுநீரகம், கண் ஆகிய உடலுறுப்புகள் வேலூா் சிஎம்சி, சென்னை எஸ்.ஆா்.எம். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு தானமாக வழங்கப்பட்டன.
தானமாக வழங்கப்பட்ட இதயம் புதன்கிழமை காலை சாலை வழியாக சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.