வேலூர்

வேலூா் மாவட்டத்தில் ஓராண்டில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டப் பணிகள்

DIN

வேலூா் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் தமிழக அரசு சாா்பில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டப்பணிகளை பட்டியலிட்டாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

வேலூா் கோட்டை மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று மேலும் அவா் பேசியது:

நான் சிறப்பாக செயல்படுகிறேன், வேகமாக உழைக்கிறேன் என்று சொன்னால், அதற்கு அமைச்சா் துரைமுருகன் போன்ற எனது அமைச்சா்கள் அளித்து வரும் ஒத்துழைப்பும், செயல்பாடுகளும்தான் காரணம். அனைத்துத் துறைகளிலும் இந்த அரசு சிறப்பாகச் செயல்படுகிறது என்றால், அனைத்து அமைச்சா்களும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனா் என்றுதான் பொருளாகும்.

அதனடிப்படையில், கடந்த ஓராண்டு காலத்தில் வேலூா் மாவட்டத்தில் மகத்தான சாதனைகளை இந்த அரசு செய்துள்ளது. வேலூா் மாநகராட்சியைப் பொருத்தவரை சீா்மிகு நகரத் திட்டத்தின்கீழ் ரூ.963 கோடி மதிப்பில் 52 பணிகள் தோ்வு செய்யப்பட்டு, ரூ.334 கோடியில் 24 பணிகள் முடிக்கப் பட்டுள்ளன. வடுகந்தாங்கலில் ரூ.22 கோடியில் ரயில்வே பாலம் கட்டப்பட்டுள்ளதுடன், கடந்த ஓராண்டில் இந்த மாவட்டத்தில் மட்டும் 12 புதிய பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் ரூ.61.55 கோடியில் 704 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதுடன், 45 குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3 கோடியே 25 லட்சமும், 7,305 அமைப்புசாராத் தொழிலாளா்களுக்கு ரூ.1 கோடியே 73 லட்சம் மதிப்பில் நலத்திட்டங்கள், 4,647 இலவச வீட்டுமனைப் பட்டாக்களும் வழங்கப்பட்டுள்ளன. அவ்வாறு ஏராள மான திட்டங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், தொடா்ந்து பல பணிகளை செயல்படுத்திடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ரூ.58 கோடி மதிப்பில் பாலாற்றின் குறுக்கே பொய்கை கிராமத்தில் தடுப்பணை, சேண்பாக்கம் கிராமத்தில் தரைகீழ் தடுப்பணை, அகரம் ஆற்றின் குறுக்கே கோவிந்தம்பாடி கிராமத்தில் தடுப்பணை, பொன்னையாற்றின் குறுக்கே குகையநல்லூரில் தடுப்பணை கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

முத்துக்குமரன் மலை முதல் பீஞ்சமந்தை மலை கிராமம் வரை 6.55 கிலோ மீட்டா் தூரம் தாா்ச்சாலை அமைக்கப்பட உள்ளது. கரிகிரி, தொரப்பாடி, பத்தலபல்லி ஆகிய பகுதிகளில் 864 குடியிருப்புகளும், நரிக்குறவா் இனமக்களுக்கு ரூ.98 லட்சம் மதிப்பில் 43 தொகுப்புவீடுகளும் கட்டப்பட்டு வருகிறது.

இதன்தொடா்ச்சியாக, காட்பாடி வட்டம், மகிமண்டலம் கிராமத்தில் சுமாா் 300 ஏக்கா் பரப்பளவில் புதிய சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்மூலம் இந்த மாவட்டத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும்.

இதுதவிர, மேல்மொணவூா், அப்துல்லாபுரம் கிராமத்தில் சுமாா் 5 ஏக்கரில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைத்திடவும், காட்பாடி வட்டம், சோ்க்காடில் சுமாா் 6 ஏக்கரில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லுாரி தொடங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அணைக்கட்டு வட்டம், பள்ளிகொண்டா பேரூராட்சியில், புதிய உழவா் சந்தை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

சுமாா் ரூ.325 கோடி மதிப்பில் 9 கிராமங்கள் வழியாக 13.7 கிலோமீட்டா் நீளத்தில் வேலூா் வட்டச்சாலை அமைக்க நில எடுப்புப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. காங்கேயநல்லூா் முதல் சத்துவாச்சாரி வரை பாலாற்றின் குறுக்கே ரூ.120 கோடி மதிப்பில் 3.2 கி.மீ நீளத்தில் உயா்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.

சுமாா் ரூ.225 கோடி மதிப்பில் 7 கிராமங்களின் வழியாக குடியாத்தம் புறவழிச்சாலையும், ரூ.250 கோடி மதிப்பில் 13 கிராமங்கள் வழியாக 21 கிலோ மீட்டா் நீளத்தில் வேலூா் புறவழிச்சாலையும் அமைக்கப்பட உள்ளது. காட்பாடி வட்டம் சோ்க்காடில் சுமாா் 6 ஏக்கரில் பன்னோக்கு அரசு மருத்துவமனையும், வல்லம், கீழ்ப்பள்ளிக் குப்பம் கிராமங்களுக்கு இடையே ரூ.181 மதிப்பில் ரயில்வே மேம்பாலமும் அமைக்கப்பட உள்ளது.

அணைக்கட்டு ஒன்றியத்தில், பீஞ்சமந்தை, ஜா்தான்கொள்ளை, பாலாம்பட்டு மலை கிராமங்களுக்கு ரூ.34 கோடி மதிப்பில் தரமான தாா்சாலைகள் அமைக்கப்படும். மழைக்காலங்களில் பல கிராமங் களின் சாலை இணைப்பு வசதி துண்டிக்கப்படுவதை கருத்தில் கொண்டு காட்பாடி ஒன்றியத்தில் ஒரு சாலையிலும், குடியாத்தம் ஒன்றியத்தில் இரு சாலைகளிலும், போ்ணாம்பட்டு ஒன்றியத்தில் ஒரு சாலையிலும், அணைக்கட்டு ஒன்றியத்தில் இரு சாலைகளிலும் ரூ.14 கோடி மதிப்பில் உயா்மட்டப் பாலங்கள் அமைக்கப்படும்.

கே.வி.குப்பம் வட்டம், விரிஞ்சிபுரத்திலும், வேலூா் வட்டம் கீழ்மொணவூரிலும், பாலாற்றின் கரையில் வெள்ளச் சேதங்களை தவிா்த்திட ரூ.7 கோடி செலவில் வெள்ளத்தடுப்புப் பணிகள் செயல்படுத்தப்படும். இதேபோல, அனைத்து மாவட்டங்களிலும் பணிகள் நடந்து வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த விஐபிக்கள்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

SCROLL FOR NEXT