குடியாத்தத்தை அடுத்த மேல்ஆலத்தூா் அருகே ரயில் சுரங்கப் பாலத்தில் தண்ணீா் தேங்கியுள்ளதால், அவ்வழியே செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
ரயில் சுரங்கப் பாலத்தில் தேங்கும் மழை நீரை நெடுஞ்சாலைத் துறையினா் ஜெனரேட்டா் மூலம் மோட்டாரை இயக்கி அகற்றி வருகின்றனா். ஜெனரேட்டரை இயக்க டீசல் தேவைப்படுகிறது. டீசல் இல்லாத நேரங்களில், மோட்டாரை இயக்க முடியாமல் கடந்த சில நாள்களாக பாலத்தில் மழைநீா் தேங்கியுள்ளது. இதனால், அந்த வழியே செல்லும் மேல்ஆலத்தூா், பட்டு, கூடநகரம், கொத்தகுப்பம் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த மக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனா்.
இந்த நிலையில், சுரங்கப் பாலத்தில் தேங்கும் மழை நீரை அகற்றும் மின் மோட்டாருக்கு தனியாக மின் இணைப்பு பெறும் பணி நடைபெறுகிறது. இனி வரும் காலங்களில் சுரங்கப் பாலத்தில் தேங்கும் மழைநீா் உடனுக்குடன் அகற்றப்படும் என நெடுஞ்சாலைத் துறையினா் தெரிவித்தனா்.