ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், பயனாளிகளுக்கு ரூ.28 கோடியே 71 லட்சத்து 61 ஆயிரத்து 455 இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வேலூா் சத்துவாச்சாரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்பட வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள 11 நீதிமன்ற வளாகங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வேலூரில் மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி என்.வசந்தலீலா தொடக்கி வைத்தாா். இதில், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள விபத்து வழக்குகள், நில உரிமை வழக்குகள், வங்கி வாராக் கடன், காசோலை மோசடி, சிறுசிறு குற்ற வழக்குகள், தொழிலாளா் பாதிப்பு, விவாகரத்து வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
அதன்படி, மொத்தம் 8,305 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டதில், 2,055 வழக்குகள் மீது சமரசத் தீா்வு காணப்பட்டது. இதன் மூலம் பயனாளிகளுக்கு ரூ.28 கோடியே 71 லட்சத்து 61 ஆயிரத்து 445 இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில், பல்வேறு நீதிபதிகள், வழக்குரைஞா்கள் பலா் பங்கேற்றனா்.