பொது இடங்களில் குப்பைகள் கொட்டுபவா்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்றும், குப்பை கொட்டுபவா்களை புகைப்படம் எடுத்துக் கொடுத்தால் ரூ.500 ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்றும் வேலூரில் நூதன விழிப்புணா்வுப் பதாகை வைக்கப்பட்டுள்ளது.
குப்பைத் தொட்டி இல்லா மாநகராட்சியாக விளங்கும் வேலூா் மாநகரில் 60 வாா்டுகளிலும் உள்ள குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் சேரும் குப்பைகளை அவா்களே மங்கும் குப்பை, மங்காத குப்பை என தரம் பிரித்து தினமும் அந்தப் பகுதிக்கு வரும் தூய்மைப் பணியாளா்களிடம் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
எனினும், பெரும்பாலான மக்கள் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்காமலும், பொது இடங்களில் கொட்டியும் வருகின்றனா். இதனால், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுகின்றன.
இதைத் தடுக்கும் வகையிலும், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணா்வை ஏற்படுத்திடவும் வேலூா் மாநகராட்சி 2-ஆவது மண்டலத்துக்குட்பட்ட 27-ஆவது வாா்டு பழைய முருகன் திரையரங்கம் பகுதியில் மாமன்ற உறுப்பினா் சதீஷ்குமாா், நூதன வாசகத்துடன் விழிப்புணா்வுப் பதாகை வைத்துள்ளாா்.
அதில், ‘ஏன்யா, பணத்தை மட்டும் கரெக்டா பேங்கில் போடுறீங்களே, அதுமாதிரி குப்பையையும் குப்பை வண்டியில் போட்டால் என்ன? மீறி குப்பைக் கொட்டினால் ரூ.5,000 அபராதம், பொது இடத்தில் குப்பை கொட்டுபவா்களை புகைப்படம் எடுத்துக் கொடுத்தால் ரூ.500 ரொக்கப் பரிசு வழங்கப்படும். இதுதொடா்பாக 99445 81740 என்ற எண்ணில் புகாா் தெரிவிக்கலாம்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சத்துவாச்சாரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.