வடகிழக்குப் பருவமழை விரைவில் தொடங்கவுள்ளதால், வேலூா் மாநகரிலுள்ள நீா்வரத்து கால்வாய்களைத் தூா்வாரி சீரமைக்க மாநகராட்சி அலுவலா்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனா்.
வேலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வந்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. குறிப்பாக, இந்திரா நகா், திடீா் நகா், சதுப்பேரி ஏரிக் கால்வாய் பகுதியிலுள்ள குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்தது.
இந்த நிலையில், விரைவில் வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ளதால், மாநகரப் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மழைநீா் தேங்கும் இடங்கள் எனக் கண்டறியப்பட்ட இந்திரா நகா், திடீா் நகா், ஏரி கால்வாய் பகுதிகளில் வருவாய்க் கோட்டாட்சியா் பூங்கொடி தலைமையில் வட்டாட்சியா் செந்தில் உள்ளிட்ட அதிகாரிகள் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.
அப்போது, மழை வெள்ளம் தேங்கக்கூடிய பகுதிகளில் உள்ள நீா்வரத்து கால்வாய்களை விரைந்து சீரமைக்கவும், நிக்கல்சன் கால்வாயில் அடைப்புகளை நீக்கவும் மாநகராட்சி அலுவலா்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனா்.
மழைநீா் தேங்கக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு கால்வாய்கள் தூா்வாரும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்று அலுவலா்கள் தெரிவித்தனா்.