வேலூா் மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டத்தில் 19 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வேலூா் மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டம் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் மு.பாபு தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் கிருஷ்ணவேணி, மாவட்ட ஊராட்சி செயலா் சாந்தி, கண்காணிப்பாளா் ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் பங்கேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
தொடா்ந்து, குடியாத்தம் ஒன்றியம், டி.பி. பாளையம் ஊராட்சி, ரங்க சமுத்திரம் ராமகிருஷ்ணா பள்ளித் தெருவில் ரூ.5 லட்சத்தில் சிமெண்ட் சாலை அமைக்க அனுமதி வழங்குவது, அணைக்கட்டு ஒன்றியம், ஊனை வாணியம்பாடி பைரவா் கோயில் அருகே புதிய ஆழ்துளைக் கிணறு, மோட்டாா் அமைக்க ரூ.3 லட்சத்தில் பணிகள் தொடங்க அனுமதியளிப்பது, மாவட்ட ஊராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு அலுவலகத்துக்கு ரூ.7 லட்சத்தில் கழிப்பறைக் கட்ட அனுமதி வழங்குவது உள்ளிட்ட 19 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.